
01. ஆச்சி
இறுதி ஊர்வலத்தில்
வீசிய காற்று
சவமாய்க் கிடந்தவரை தீண்டியதும்
தன்னுடல் மீதிருந்த பூக்களை உதிர்த்து
நிலமெங்கும் விட்டுச்சென்றார்
02. அபூர்வ நிழல்
ஏதேனும் ஓர் அபூர்வ நிழலில்
என்னை மறைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மரத்தினுடையதாகவோ பறவையினுடையதாகவோ
மனிதனுடையதாகவோ
மறைக்குமந்த அந்த அபூர்வ நிழல்
இருக்கலாமென
ஒரு அசரீரி கேட்கிறது.
என் மனதின் அபூர்வ நிழல்
தனிமையில் மறைந்திருக்கிறது.
சாபத்தில் எழுந்திருக்கிறது.
என்னுடைய நிழலில்
நீயேன் இன்னும்
தோன்றவில்லையென
அபூர்வத்திடம் கேட்கலாமெனில்
அபூர்வம் மறைந்திருக்கும் நிழல் எதுவென்று
அறியேன்.
03. துளிர்
தருணத்தில்
சிறகசைக்க காத்திருக்கும்
வலசை மனத்தில்
அமைதியின் கிளை
துளிர்க்கிறது