ஜியோ பேபி: “கலைஞர்கள் சிறையில் அடைக்கப்படலாம்…” 

நகர்வு

Jeo-Baby

மலையாள இயக்குநர் ஜியோ பேபி. இவர் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர்.

அவர் பேட்டி ஒன்றை அண்மையில் அளித்திருந்தார். அதில் ஜியோ பேபி கூறியது கவனிக்கத்தக்கது. அவர் சொன்னது இதோ: 

“இந்தியாவில் இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கே அச்சமாக இருக்கிறது. மதம் மற்றும் அரசியல் காரணங்களால் நாங்கள் சென்சாருடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

படைப்பாளிகளை மட்டுல்ல… இது கலைஞர்களையும் பாதிக்கிறது. படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்க எல்லோரும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருப்பது அவசியம். என்றாலும் துரதிர்ஷ்டவசமாகச் சிலர் பயந்து பின்வாங்கி விடுகிறார்கள்.

அண்மையில் ஓடிடியில் வெளியான நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

ஆனாலும் அதன் படக்குழு இதனை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. உண்மையிலேயே தாங்கள்தான் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்று அவர்களே நம்பி அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். சினிமாவுக்கோ அல்லது கலைஞர்களுக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ இது நல்லதல்ல.

2007-ல் திரைப்பட மாணவனாக இருந்தபோது ​​நான் இயக்கிய ‘சீக்ரெட் மைண்ட்ஸ்’ (Secret Minds) என்ற குறும்படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றியது. அந்தப் படத்துக்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.

2005-ம் ஆண்டிலிருந்து நான் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து நிறையப் படித்துத் தெரிந்துகொண்டேன். அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான். ‘காதல் தி கோர்’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், தன்பால் ஈர்ப்பாளராக மேத்யூ கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்ததற்கு பலரும் அவரை விமர்சித்தார்கள்.

‘காதல் தி கோர்’ படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது, ஒருநாள் அவர்களும் இச்சமூகத்தில் சாதாரணமான வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கை வருகிறது. 

நம் சமூகம் இப்படியாக இயங்குவதால்தான் அவர்களும் அப்படி இருக்கிறார்கள். நம் நாட்டில் பெண்கள் இப்படியான வாழ்க்கையைத்தான் எதிர்கொண்டு வாழ்கிறார்கள். ஓமனா கதாபாத்திரம் தன்பால் ஈர்ப்பாளர் கணவருடன் சோகமான வாழ்க்கையை வாழ்கிறது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பெயரில்லாத நிமிஷா கதாபாத்திரம் மனைவி என்ற ஒற்றை அடையாளத்தால் மட்டுமே வாழ்கிறது. நம் சமூகம் சரியாக இருந்தால் நான் இந்த இரண்டு வகையான படங்களை இயக்குவதற்கான தேவையே இருந்திருக்காது. வேறு எதாவது கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியிருப்பேன்.

‘காதல் கோர்’ ஓடிடியில் வெளியான பிறகு, நாடு முழுவதிலும் இருந்து நிறைய பாராட்டுகளைப் பெற்றது. மேத்யூ, ஓமனா அல்லது தங்கன் போன்றவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லி எனக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன. பரந்த பார்வையாளர்களைப் பெறுகிறோம். நமது அரசியல், சித்தாந்தம், கன்டென்ட் பல்வேறு நாடுகளைச் சென்றடைவதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்.

சமூகத்தின் இப்படியான தற்போதை நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் காரணமாக சிறையில் அடைக்கப்படலாம் என்பதால் நான் அச்சப்படுகிறேன்.

ஆனால் நாம் ஒன்றுபட்டுப் போராடினால் இதில் வெற்றி பெறுவோம் என்பது எனக்குத் தெரியும். காரணம் கலையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது!” என்றார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page