ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் பேசியது:
“சில நாட்களுக்கு முன் ‘பாரத் vs இந்தியா’ விவகாரத்தின்போது இரண்டும் ஒன்று தானே, எதற்கு இந்த பெயர் மாற்றம் என யோசித்தேன்.
அதை நான் ட்வீட்டாக பதிவு செய்யும்போது அந்தப் பதிவு வைரலாகி, நிறையப் பின்னூட்டங்கள் வந்தன.
அரசியல் தொடர்பான எதையும் நான் இதுவரை பதிவிட்டதில்லை. ஏனெனில் எனக்கு அரசியல் தெரியாது.
இந்த விவகாரத்தில் ஓர் இந்திய குடிமகனாக எனக்கு என்ன தோன்றியதோ அதைப் பதிவு செய்தேன்.
என் கருத்து எனக்குத் தவறாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பு மிகஅதிகம்.
இரண்டே நாட்களில் நான் ‘ஆன்டி’ இந்தியன் ஆகிவிட்டேன். ‘ஆன்டி’ இந்துவாகிவிட்டேன். நிறைய விஷயங்களில் ‘ஆன்டி’யாகிவிட்டேன். ‘ப்ரோ’ (Pro) ஆகிவிட்டேன்.
என் இணையர் வெளிநாட்டவர் என்பதால் நான் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை என ஆகிவிட்டேன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இத்தனை வெறுப்பு, ஏன் நாம் எல்லோரும் இப்படி இருக்கிறோம்?
ஒருவருக்கு ஒருவர் கொள்கைகள் மாறலாம். கருத்துக்கள் மாறலாம். அதற்கும் மரியாதை கொடுப்பதுதானே மனிதம்?
பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்திப் பேசக்கூடாது.
நம் நாட்டில் தற்போது இந்த வெறுப்பு அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது!” – என்றார்.
Add your first comment to this post