மும்பை: 80களின் இறுதியில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான, ராமனந்த சாகர் இயக்கிய தொடரான ‘ராமாயணம்’ மிகவும் பிரபலமான ஒன்று.
அதில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தனக்கு கமர்சியல் படவாய்ப்புகளே வரவில்லை என நடிகர் அருண் கோவில் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் அருண் கோவில் நடித்திருந்தார். தீபிகா சிகாலியா சீதையாகவும், தாரா சிங் அனுமாராகவும் நடித்தனர்.
மொத்தம் 78 எபிசோட்களைக் கொண்ட இத்தொடர் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது அருண் கோவில் ’ஹுகுஸ் புகுஸ்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ராமர் கதாபாத்திரத்தில் நடித்தபிறகு கமர்சியல் படவாய்ப்புகளே தனக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
“ராமாயணம் தொடரால் நல்லவை, கெட்டவை என இரண்டுமே நடந்தன. நிறைய மரியாதையும், கவுரவமும் எனக்குக் கிடைத்தது. ஆனாலும் கமர்ஷியல் பட வாய்ப்புகள் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது. என்னுடைய ராமர் இமேஜ் வலிமையாக இருப்பதாக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ‘மக்கள் உன்னை ராமராக பார்க்கிறார்கள். உன்னை அவர்கள் வேறு எந்த கதாபாத்திரத்திலும் பார்க்க மாட்டார்கள்’ என்றனர்.
ஒரு நடிகனாக இது நல்ல விஷயமல்ல. அது ஏற்படுத்திய எதிர்மறை விளைவு என்னுடன் பல ஆண்டுகள் தங்கிவிட்டது. என்னால் எதுவுமே செய்யமுடிவில்லை. திரைப்படங்கள் எனக்குக் கேள்விக்குறியாகி விட்டன.” – என வருத்தத்துடன் கூறினார் அருண் கோவில்.
Add your first comment to this post