வீதிகள் பித்துப்பிடிக்கும்
பைத்தியமொன்றின்
முடிக்கப்படாத ஓவியத்தினை
நிறைவு செய்கிறான்
நள்ளிரவுகளில் அவன்
நவீன
விரல் நடனங்களை
தன்னுள் கொண்டிருக்கும்
பைத்தியப்பையினுள்
பெருகும்
சாக்பீஸ் துண்டுகளில்
அவன் பங்கும்
இருகோடுகளில் சிலுவையேறும்
இயேசுவின் வழியிலிருந்து
பெருகும் கருப்புக்குருதி
தார் சாலையெங்கும் பரவ
வாழ வழி செய்கிறான்
கரித்துண்டின் மிச்சத்தில்
சிறுகுடலென சுருண்டிருக்கும்
பைத்தியம் மீது
பசிவரைந்த ஓவியத்தினை
முடிக்க முடியாமல்
திணறுகிறான்
பசி முற்றிப்
பைத்தியமான இவனும்
அறைக்குள்ளே ஒடுங்கிவிடுகிறான்
கரித்துண்டுகள் நிரப்பி வைத்தபடி
முடிக்கப்படாத ஓவியங்கள்
முடிவற்ற ஓவியங்களாகி
நகர்மீது படியத்துவங்கும்
இனிவரும் இரவுகளில்.
Add your first comment to this post