சாம்பல் பாரம்

நகர்வு

அலங்கார விளக்கொளி

மேள தாளம் 

‘கொஞ்ச நேரம் இரு’ எனும் குரல்களில் 

தோளழுந்தும் விரல்களில் 

செல்பி, க்ரூப்பி புன்னகைகளில் 

செயற்கையாக மறைத்த 

கண்ணீரில் 

இந்தப்  புடவை நகைப் பேச்சுகளில் 

வாழையிலையில் வரிசையிட்ட விருந்துணவில் 

ஒன்றியும் ஒன்றாதுமிருக்கிறேன் 

மழையிருளில் வீடு திரும்பி 

தயிருக்கு உறை ஊற்றி 

நகைகள் கழற்றி 

கொடியில் புடவை மடித்துப்போட்டு  கட்டிலில் சரிகையில் 

ஜன்னல் கட்ட நிழல்கள் 

என்மேல் வீழும்

சாம்பல் பாரம் 

சொல்லில் ஏறாதது.

உமாமகேஸ்வரி கவிதைகள்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page