கடந்த 16-ம் தேதி இரவு நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யத் தொடங்கி, 17-ம்தேதி முழுவதும் பெய்த மழை 18-ம் தேதி காலை வரை நீடித்தது.
4 மாவட்டங்களும் நீரால் சூழப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர்மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோதிலும் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சொந்த ஊரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
உதவி தேவைபடுபவர்கள் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வந்தார்.
அதோடு நில்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றும் களப்பணியில் ஈடுபட்டார்.
இதனிடையே மழை, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை சென்ற நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜும் அவருடன் இணைந்து சென்றார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
‘அமைச்சர் உடனான களஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை’ என்பதான விமர்சனங்களை சிலர் எழுப்பினர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பதற்காக அல்ல… அது நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது!” என்று பதிலடி தந்து பதிவிட்டுள்ளார்.
Add your first comment to this post